சென்னை: சென்னை புளியந்தோப்பில் பட்டாக்கத்தியால் ரவுடிகள் கேக் வெட்டிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டது. இதுதொடர்பாக ரவுடிகள் 3 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். சென்னை புரசைவாக்கம், சரவண பெருமாள் கோயில் தெருவை சேர்ந்தவர் ஐயப்பன் (24). இவர் தனது நண்பர்களான புளியந்தோப்பு சாமுண்டீஸ்வரன் என்கிற சாம் (23), மற்றும் சரத்குமார் (22) ஆகியோருடன் சேர்ந்து கடந்த ஆண்டு நவம்பர் மாதம் புளியந்தோப்பு 3வது தெருவில் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டார். அப்போது, பெரிய பட்டா கத்தியை எடுத்து கேக் வெட்டி கத்தியை நாலாபுறமும் சுற்றி பொதுமக்களை அச்சுறுத்தும் செயலில் ஈடுபட்டனர். இந்த வீடியோ கடந்த 2 நாட்களாக சமூக வலைதளங்களில் பரவியது.
இதையடுத்து, புளியந்தோப்பு ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி வழக்குப்பதிவு செய்து ஐயப்பன், சாமுண்டீஸ்வரன் மற்றும் சரத்குமார் ஆகிய 3 பேரையும் கைது செய்து புழல் சிறையில் அடைத்தார். இவர்களில் கைது செய்யப்பட்ட ஐயப்பன் மீது ஓட்டேரி காவல் நிலையத்தில் குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. ஏற்கனவே மாங்காடு பகுதியில் ரவுடிகள் ஒன்று சேர்ந்து பினு என்ற ரவுடியின் பிறந்தநாளை பட்டா கத்தியால் கேக் வெட்டி கொண்டாடினர். இதையடுத்து பினு பிரபல ரவுடியானார். அதேபோன்று பட்டா கத்தியால் கேக் வெட்டிய சம்பவம் புளியந்தோப்பில் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.